HayWind மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் காற்றாலை முதலீடு முன்னெடுப்பு
மன்னாரில் 50MW காற்றாலை திட்டம்

இலங்கையின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு காற்றாலை திட்டமான 50MW திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை Hayleys Fentons நிறுவனத்தின் காற்றாலை பிரிவான HayWind மூலம் மன்னார் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான போட்டிமிக்க விலைமனுக் கோரலில் வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை மின்சார சபை (CEB) உத்தியோகபூர்வ மின்சார கொள்முதல் உடன்படிக்கை (PPA) கைச்சாத்திடும் நிகழ்வு, 2025 மே 28 ஆம் திகதி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது.
விலைமனுக் கோரல் நடவடிக்கையைத் தொடர்ந்து, HayWind One Limited நிறுவனத்திற்கு மன்னார் பகுதியில் 50MW காற்றாலை அபிவிருத்தித் திட்டத்தை வழங்குவதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. 1kWh அலகு மின் உற்பத்திக்கு 4.65 சதம் அமெரிக்க டொலர் எனும் மிகக் குறைந்த விலையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இது நிர்மாணித்தல், உரிமைப்படுத்தல், செயற்படுத்தல் (Build, Own, Operate – BOO) முறைப்படி உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி பயணத்தில் முக்கியமான முன்னேற்றமாக இது கருதப்படுவதோடு, நாட்டிற்கு நீண்டகால சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை கொண்டுவரும்.
இலங்கை வலுச்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் K.T.M. உதயங்க ஹேமபால இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்த திட்டம் இலங்கையின் பசுமை வலுச்சக்தி எதிர்காலத்திற்கான, சரியான காலத்தில் அமைந்த, ஒரு முன்னோக்கிய முதலீடாகும். இது நாட்டின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்குகளை அடைவதற்கும் நீண்டகாலத்திற்கான வலுச்சக்தி சுதந்திரத்தை அடைவதற்கும் தேவையான கூட்டு ஒத்துழைப்புகளுக்கான தேவையை பிரதிபலிக்கின்றது” எனக் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் சுமார் 5MW திறன் கொண்ட தலா 10 காற்றாலை கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. 18 மாதங்களில் அதனை செயற்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. செயற்பாட்டிற்கு வந்ததும், இது தேசிய மின்கட்டமைப்பிற்கு அதிகளவான தூய்மையான, மலிவான மின்சாரத்தை வழங்கும். இந்த மின் உற்பத்தியை இலங்கை மின்சார சபை கொள்முதல் செய்யும் என்பதனால், செலவுகளை குறைத்து, நுகர்வோருக்கு கட்டுப்படியான விலையிலான மின்சாரத்தை வழங்க இது உதவியாக அமையும். பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியை விட, காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் தூய்மையானதும், நிலைபேறான தன்மை உடையதும், சூழலுக்கு மாசான வாயுக்களின் வெளியீடுகள் அற்றதுமாகும். இது நிகர பூச்சிய காபன் இலக்கை அடைவதற்கு இலங்கைக்கு உதவுகின்றது.
இது குறித்து Hayleys PLC தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே தெரிவிக்கையில்: “இது இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி கனவுகளை அடைவதற்கான ஒரு மிகப்பெரிய முன்னேற்றமான படியாகும். நாம் இதை வழிநடத்துவதில் பெருமை கொள்கிறோம். நிலைபேறான வலுச்சக்தி முதலீட்டில் முன்னணியில் இருப்பதிலும், நாட்டிற்கு மிகவும் கட்டுப்படியான விலையில் மின்சாரத்தை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதிலும் நாம் பெருமை கொள்கிறோம். புதுப்பிக்கத்தக்க தொழில்நுட்பங்களை தழுவுவதன் மூலம், உலகளாவிய காலநிலை மாற்ற பிரச்சினைகளை தடுக்கும் நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நாம் பங்களிப்பு செய்து வருகின்றோம். அந்த வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை 70% புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்கை அடைவதை நோக்காகக் கொண்டுள்ள நிலையில், Hayleys குழுமம் 2035 ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய காபன் வெளியீட்டை நோக்கிய தனது சொந்த பயணத்தை இதன் மூலம் துரிதப்படுத்தியுள்ளது.” என்றார்.
Hayleys Fentons நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக தெரிவிக்கையில், “மன்னார் காற்றாலை திட்டமானது எமது தூய்மையான வலுச்சக்தி உற்பத்திகளில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகும். வணிக ரீதியாக நடைமுறைப்படுத்தக் கூடிய, அளவீடுகள் மூலம் விரிவுபடுத்தக்கூடிய தீர்வுகள் மூலம், 2030 இற்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி எனும் நாட்டின் இலக்கை கடந்து செல்வதிலான எமது உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.” என்றார்.
இந்த முயற்சியின் மூலம் Hayleys Fentons Limited நிறுவனம் தனது புதிய “HayWind” எனும் துணை நிறுவனத்தின் ஊடாக இலங்கை முழுவதும் காற்றாலைத் துறையில் அதன் முதலீட்டை விரிவாக்கியுள்ளமை அடையாளப்படுத்தப்படுகிறது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் வசந்த எதுஸ்சூரிய தெரிவிக்கையில், “இந்த காற்றாலை திட்டமானது தூய்மையான மற்றும் குறைந்த செலவிலான மின்சாரத்தின் மூலம் தேசிய மின்கட்டமைப்பை பலப்படுத்துகிறது. எதிர்கால தலைமுறைகளுக்கான ஈடுகொடுக்கக் கூடிய மற்றும் நீண்டகால நிலைபேறான மின்சார கட்டமைப்பை உருவாக்கும் முக்கியமான படியாக இது அமைகிறது.” என்றார்.
Hayleys Solar நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷேன் பெரேரா இங்கு தெரிவிக்கையில், “Hayleys Solar நிறுவனம் எனும் வகையில் நாம் 300MW solar EPC (சூரிய மின்சக்தி கட்டமைப்பு வடிவமைப்பு, கொள்முதல், நிறுவல்) திட்டங்களை நிறைவு செய்துயுள்ளோம் என்பதுடன் 150MW புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி முதலீடுகளை பெற்றுள்ளோம். HayWind நிறுவனத்தின் ஆரம்பம் மற்றும் எமது முதலாவது காற்றாலை திட்டமான இத்திட்டத்தின் தொடக்கம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் பசுமை வலுச்சக்தி பயணத்தை வேகப்படுத்தும் வகையில் நாம் எமது தலைமைப் பாத்திரத்தை விரிவாக்குவதில் பெருமை அடைகிறோம். இது இவ்வாறான பாரிய அளவிலான திட்டங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்ளக்கூடிய திறன்களை இலங்கை நிறுவனமொன்று கொண்டுள்ளதை நிரூபிப்பதற்கான உண்மையான சாட்சியமாகும்.” என்றார்.
இவ்விடயங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள: [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Hayleys Fentons Limited பற்றி
1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Hayleys Fentons Limited நிறுவனம், இலங்கையின் ஆரம்பகால பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். நாட்டின் நம்பர் 1 Solar EPC நிறுவனம் எனும் வகையிலும் MEP ஒப்பந்ததாரர் எனும் வகையிலும், இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை விசேடத்துவத்தைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய விசேட பிரிவுகளில் சூரிய மின்சக்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், மின்சாரம் மற்றும் மின்விளக்குகள், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கி மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் பொருத்தல் மற்றும் எரிவாயு, பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஓடியோ மற்றும் காட்சி ஒருங்கிணைப்பு, தடையில்லா மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், வசதியளிப்பு முகாமைத்துவம், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் 3D காட்சிப்படுத்தல் ஆகியன அடங்குகின்றன. புத்தாக்கம் மற்றும் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்ற இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம், சிறந்த வாழ்க்கைக்கு நிலைபேறான மற்றும் புத்தாக்கமான பொறியியல் சேவைகளை வழங்குவதாகும்.