இணை ஊடக வெளியீடு
இந்த இணைந்த ஊடக வெளியீட்டை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை என்பன இணைந்து வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது வருடமாக கடல்சார் பாதுகாப்பை ‘திசி ரெல 2026’ ஊடாக வலிமைப்படுத்தியுள்ளன
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து ‘திசி ரெல 2026’ ஐ அறிமுகம் செய்துள்ளன. கடல்சார் கண்காணிப்பு, செயற்பாட்டு ஆற்றல் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புணர்வு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக இந்தக் கைக்கோர்ப்பு அமைந்துள்ளது.
இந்த ஆண்டு, ‘திசி ரெல 2026’ தனது சமூக ஈடுபாடு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் விரிவாக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வெற்றிகரமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இம்முறை கிழக்கு மாகாணத்திற்கும் அது விஸ்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘கடல்சார் சூழலில் எப்போதும் கண்காணிப்பாக இருத்தல்’ எனும் தொனிப்பொருளில் ‘திசி ரெல’ கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது, சர்வதேச கடல் பரப்பில் கடல்சார் குற்றச் செயல்களுக்கு எதிராக போராடுதல் மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பான கடல் பகுதிகளை ஊக்குவித்தல் போன்றவற்றுக்காக இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான தொடர்ச்சியான பங்காண்மையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. புலனாய்வுப் பகிர்வு, செயற்பாட்டுக் கைகோர்ப்பு, மேம்படுத்தப்பட்ட சாதனங்களினூடான ஆதரவு மற்றும் பொது மக்கள் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் போன்றவற்றினூடாக இரு நாடுகளும் ஆட் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத மீன்பிடி மற்றும் இதுபோன்ற சட்ட விரோத கடல்சார் நடவடிக்கைகளில் ஆபத்தைத் தணிப்பதில் இணைந்து செயலாற்றி வருகின்றன.
கடந்த மூன்றாண்டு காலமாக, ‘திசி ரெல’ திட்டத்தினூடாக இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. இதில் 24 கண்காணிப்பு ட்ரோன்கள், மூன்று all-terrain vehicles (ATV), மூன்று Stabicraft ரோந்து படகுகள் என்பனவற்றுடன் வாரந்தோறும் 24 மணி நேரமும் இயங்கும் ஹொட்லைன் இலக்கமான – 106 ஐ நிறுவுதல் என்பனவும் அடங்கியுள்ளன.
மேலும், இலங்கையின் கரையோரப் பாதுகாப்புப் படையின் செயற்பாட்டு ஆற்றலை மேம்படுத்தும் வகையில், ‘திசி ரெல 2026’ திட்டத்தினூடாக மேலும் ஐந்து all-terrain vehicles (ATV) களை அன்பளிப்புச் செய்து, கரையோரக் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும், துரித பதிலளிப்பு செயற்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும்.
இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் குறிப்பிடுகையில், ‘இலங்கையின் கடல்சார் எல்லைகளையும், கரையோர சமூகங்களையும் பாதுகாப்பதில் இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான பங்காண்மை அமைந்துள்ளது’ என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘திசி ரெல 2026 ஊடாக, இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை மற்றும் அவுஸ்திரேலிய எல்லைப் படை ஆகியனவற்றுக்கிடையில் காணப்படும் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் பகிரப்பட்ட பொறுப்பை வெளிப்படுத்துகிறது. இந்தச் செயற்பாடு கிழக்கு மாகாணத்தில் விஸ்தரிக்கப்படும் நிலையில், சமூக விழிப்புணர்வு மற்றும் பொது மக்களின் பங்கேற்பு போன்றன எமது கடல் பிராந்தியங்களைப் பாதுகாப்பதிலும், சட்டவிரோதமான கடல்சார் செயற்பாடுகளையும் தவிர்ப்பதற்கு பெரிதும் எமக்கு உதவியாக அமைந்திருக்கும்’ என்றார்.
இணை முகவர் செயலணி செயற்பாடுகள் இறைமை எல்லைகள் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பிரெட் சொன்டர் AM, குறிப்பிடுகையில், ‘இந்தத் திட்டம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே தொடரும் உறுதியான பங்காண்மையைப் பிரதிபலிக்கின்றது’ என்றார்.


தொடர்ந்து கருத்து வெளியிட்ட ரியர் அட்மிரல் சொன்டர், ‘தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக, திசி ரெல திட்டத்தினூடாக, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய கூட்டாண்மை செயற்பாடு ஆகியவற்றுக்கிடையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கொண்டுள்ள முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திறனைக் கட்டியெழுப்புதல், செயற்பாட்டு ஆதரவு மற்றும் சமூக ஈடுபாடு போன்றவற்றில் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதனூடாக, கடல்சார் பாதுகாப்பை வலிமைப்படுத்துவது மற்றும் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவது என்பனவற்றில் நாம் இணைந்து செயற்பட்டு வருகிறோம்’ என்று கூறினார்.
சந்தேகத்திற்கிடமான கடல்சார் செயற்பாடுகளை இரகசியமான முறையில் 24/7 ஹொட்லைன் இலக்கமான 106 இற்கு அறிவிக்குமாறு பொது மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்து சமுத்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பான, உறுதியான மற்றும் மீட்சித்திறனுடனான கடல்சார் சூழலை ஊக்குவிப்பதில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையே வளர்ந்து வரும் இணைந்த செயற்பாட்டை திசி ரெல 2026 பிரதிபலிக்கின்றது.
படம் – திசி ரெல 2026 அறிமுக நிகழ்வில் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட all-terrain vehicle உம் காணப்படுகின்றது.