யாழ் வர்த்தக சமூகத்தினருக்கு தனது நிபுணத்துவ சேவையை வழங்கவுள்ள First Capital நிறுவனம்

யாழ் வர்த்தக சமூகத்தினருக்கு தனது நிபுணத்துவ சேவையை வழங்கவுள்ள First Capital நிறுவனம்

ஜனசக்தி குழும நிறுவனமான First Capital Holdings PLC, யாழ் வர்த்தக சமூகத்தினரிடையே முதலீட்டு வங்கியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவை தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கிலும், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சியில் பங்கேற்றிருந்தது. முழுமையான சேவையை வழங்கும் முன்னணி முதலீட்டு நிறுவனம் என்ற வகையில், முதலீட்டு வங்கியியல் தொடர்பான பல தகவல்களை இந்த கண்காட்சிக்கு வருகைதந்து கலந்துகொண்டவர்களுக்கு First Capital நிறுவனம் வழங்கி விளக்கமளித்திருந்தது.

மேலும், இப்பிராந்தியத்திலுள்ள வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு தனது நிறுவன தயாரிப்புக்கள் மற்றும் சேவை தொடர்பில் தெளிவூட்டுவதற்கும், அவர்களது தேவைகளை அறிந்துகொள்ளும் வகையிலும் நேரடி கலந்துரையாடலுக்கான விசேட நிகழ்வை First Capital நிறுவனம் யாழ்ப்பாணம் Jetwing ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் ஜனசக்தி குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவரும், யாழ் வர்த்தக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவருமான மதிப்பிற்குரிய சந்திரா ஷாஃப்டர் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய First Capital Holdings PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டில்ஷான் வீரசேகர, “யாழ் பிராந்தியத்துக்கு வருகை தந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முதலீட்டு வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மக்கள் காட்டும் ஆர்வம் தொடர்பில் நாம் வியப்படைகிறோம். மேலும் இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, இவை பற்றிய தெளிவான விளக்கத்தை வழங்கவும் நாம் மும்முரமாக செயற்பட்டு வருகிறோம். இதன்மூலம் உங்கள் முதலீடுகள் தொடர்பில் சரியான முடிவுகளை நீங்கள் எடுக்கமுடியும். இலங்கையில் முன்னோடியான முதலீட்டு நிறுவனம் என்ற வகையிலும், நாற்பது வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் நம்பிக்கை மற்றும் செயற்திறனுடன் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியமான ஜனசக்தி குழுமத்தில் உள்ள ஒரு முன்னேற்றகரமான நிறுவனம் எனும் வகையிலும் உங்கள் முதலீட்டுத் தேவைகளுக்கான சரியான நிதித் தீர்வுகள் குறித்து எமது நிபுணத்துவ சேவையை வழங்குவதற்கு நாம் இங்கு வந்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

நிதித் தீர்வுகள் மூலம் அனைத்து இலங்கை மக்களினதும் வாழ்க்கையை மேம்படுத்துவதை தொலைநோக்காகக் கொண்டுள்ள First Capital நிறுவனமானது ‘செயற்திறனுக்கு முன்னுரிமை’ என்பதை கடைப்பிடிக்க முயற்சிக்கிறது. இடர்முகாமைத்துவ செயற்பாடு மற்றும் செல்வத்தை உருவாக்குவதற்கும், புத்தாக்கமான தீர்வுகளை முன்னெடுக்கும் நோக்கத்துடனும் டிஜிட்டல் யுகத்தில் தொடர்ச்சியாக வாய்ப்புக்களை ஆராய்வதோடு, ஸ்திரத்தன்மை, போட்டித்தன்மை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பேணுவதன் மூலமும் ‘செயற்திறனுக்கு முன்னுரிமை’ எனும் வர்த்தகநாம தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் First Capital நிறுவனம் கவனம் செலுத்துகிறது.

இதனை எதிர்காலத்தின் அடிப்படையில் நோக்கும்போது நிறுவனத்தின் அடிப்படைத் தத்துவங்கள், பணியாளர் குழுக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன் First Capital நிறுவனத்தினால் சவாலான சந்தை மாற்றங்களையும் மீறி எழுச்சியடைய முடிந்துள்ளது. First Capital நிறுவனமானது மேம்பட்ட டிஜிட்டல் திறன்களுடன் இணைந்த, மாறிவரும் டிஜிட்டல் தளத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வருவதுடன், பொருத்தமான மாற்றங்களுக்கும் முகம்கொடுக்கின்றது. மேலும், வாடிக்கையாளர் அனுபவங்களை மாற்றியமைக்கும் வகையில் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தி அதன் வணிக அமைப்பை ஒருங்கிணைக்கிறது.

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி:

இந்நிகழ்வில் First Capital நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. டில்ஷான் வீரசேகர மற்றும் ஜனசக்தி குழுமத்தின் ஓய்வுபெற்ற தலைவரான திரு. சந்திரா ஷாஃப்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.