தமது நீண்ட நாள் சேவை ஊழியர்களை கௌரவிக்கும் வருண் பீவரேஜஸ் லங்கா நிறுவனம்

தமது நீண்ட நாள் சேவை ஊழியர்களை கௌரவிக்கும் வருண் பீவரேஜஸ் லங்கா நிறுவனம்

வருண் பீவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் (Varun Beverages Lanka Pvt Ltd – VBLL) ஆனது, வருண் பீவரேஜஸ் லிமிடெட் (Varun Beverages) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது அமெரிக்காவிற்கு வெளியே PepsiCo வினது பானங்களை போத்தலில் அடைக்கும் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் அண்மையில் 25 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அதன் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு விருது விழாவை நடாத்தியிருந்தது. தமது தொழில் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நிறுவனத்திற்காக அர்ப்பணித்த, நிறுவனத்தின் 36 பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களைப் பாராட்டி, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தது.

இவ்விருது வழங்கும் விழாவில் பிரதம விருந்தினராக, பல்தேசிய நிறுவனமான வருண் பீவரேஜஸ் லிமிடெட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆர்.ஜே கோர்ப் (RJ Corp) நிறுவனத்தின் தலைவர் திரு. ரவி காண்ட் ஜெய்பூரியா கலந்து கொண்டார். மிகவும் மதிக்கப்படும் வணிக தலைவர்களில் ஒருவரான இவர், இவ்விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வருண் பீவரேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளர்சபை உறுப்பினர், தேசபந்து திலக் டி சொய்சா, கௌரவ விருந்தினராக இவ்விழாவில் கலந்து கொண்டார்.

வருண் பீவரேஜஸ் இந்தியாவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. மன்மோஹன் போல், வருண் பீவரேஜஸ் இந்தியாவின் பிராந்திய பிரதம தொழில்நுட்ப அதிகாரி திரு. பூபின்தர் சிங், வருண் பீவரேஜஸ் இந்தியாவின் பிராந்திய பிரதம நிதி அதிகாரி திரு. பிரதீப் கோயல், வருண் பீவரேஜஸ் இலங்கையின் நாட்டுக்கான தலைவர் திரு. அமித் ஜோஷி மற்றும் வருண் பீவரேஜஸ் லங்காவின் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விருது வழங்கும் விழாவில் நிறுவனத் தலைவர் திரு. ரவி காண்ட் ஜெய்பூரியா மற்றும் நாட்டுக்கான தலைவர் திரு. அமித் ஜோஷி ஆகியோர், நிறுவனத்தின் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்திற்காக தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர். பணிக் கலாசாரத்தை செயற்படுத்துதல், செயற்றிறனில் கவனம் செலுத்துதல், தமது வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை தொடர்ந்தும் தயாரிப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இதன்போது அவர்கள் வலியுறுத்தி உரையாற்றியிருந்தனர்.